Saturday, September 3, 2011

துலுக்க நாச்சியார் !!!

 இந்தியாவின் மிகப்பெரிய வழிபாடான திருமால் நெறியின் வளச்சிக்கு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தன் பங்கை செலுத்தியுள்ளது. வங்க நாடு திருமாலோடு ராதையையும் தமிழகத்தின் வைணவம் ஆண்டாளை திருமாலுக்கு இணையாகவும் சேர்த்தது.. 

  இஸ்லாத்தின் செல்வாக்கால் தமிழ் வைணவத்தில் துலுக்க நாச்சியார் கதை பிறந்தது!!!!

 மதுரை அழகர்கோவிலில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் அழகரை பற்றிய கதை ஒன்று உள்ளது. 'தன் தங்கை மீனாட்சி திருமணத்தை காண வரும் அழகர் கோபித்துகொண்டு வண்டியூர் சென்று அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்குகிறார்' என்பது கதையாகும். 

   ஆனால் உண்மையில் அங்கு துலுக்க நாச்சியார் கோவில் ஏதும் இல்லை.கதை மட்டும் வலிமை உடையதாக உள்ளது.. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வண்டியூர் பகுதியில் இஸ்லாமியர் வானவேடிக்கை நடத்தி அழகரை வரவேற்று உள்ளனர்.. 

  திருவரங்கத்தில்  துலுக்க நாச்சியார் கதையும் ஒரு சன்னதியும் உள்ளது. திருமாலின் சிலை மீது ஆசைகொண்ட சுல்தான் மகளொருத்தி அந்தசிலையை பிரிந்த சோகத்தில் உயிர்விட்டாலாம்.. இந்த கதையை குறிப்பிடும் திருவரங்கம் கோவில் ஒழுகு, "பெருமாள் நியமனத்தினாலே ராஜமகேந்திரன் திருவீதியில் வடகீழ் மூலையில் திருநடை மாளிகையிலே அறையாகத் தடுத்து அந்த டில்லிச்வரன் புத்திரியான ஸ்ரதானியை சித்ரருபமாக எழுதி வைத்து பிரதிஷ்டிப்பித்து" என்று கூறுகிறது.

இசுலாமியர் அல்லாத தமிழர்கள் நாகூருக்கு சென்று வழிபடுவதை போல விருத்தாசலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் நெடுங்காலமாக இசுலாமியர்கள் வழிப்பட அனுமதிக்கப் படுகிறார்கள். இது பலர் அறியாத செய்தியாகும். அக்கோவில் இறைவன் கடலாடச் செல்லும்போது கிள்ளை என்னுமிடத்தில் அமைந்துள்ள தர்காவிற்கு கோவில் மரியாதையாக மாலை தருகிறார்கள்.

மத அடிப்படைவாதம் வன்மத்தோடு வளர்க்கப்படும் இந்நாளில் இஸ்லாத்துக்கும் வைணவத்துக்கும் உள்ள பழம்பெருமை நாம் தெரிந்து கொள்ளவேண்டியவை..

Tuesday, August 16, 2011

ஆடி மாதம் வைக்கப்படும் கூழ்-???

நம்முடைய  முன்னோர்கள் உருவாக்கிய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் காரணங்கள் பல உண்டு..  
அது போல், ஆடி மாதம் வைக்கப்படும் கூழிற்கும் காரணம் உண்டு.. தினத்தந்தி யின் ஆன்மீக இதழில் இருந்து...

  சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறது. அதன்படி ஆடி மாதத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுகிறது. 
இந்தியாவை பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுகிறது.. இத்தருணத்தில் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி.. 

அதன்படி ஆடி ஆடிமாதத்தில் சின்ன அம்மை, தட்டம்மை அதிக அளவில் பரவும். அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு கூழ் உற்றும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். 

இந்த கூழ் உடலை குளிர்விக்க கூடிய உணவு மற்றும் அருமருந்தும். 
இரும்பு சத்தும் ,கால்சியம், நார்ச்சத்து ஆகியவை இதில் உள்ளது..

    அம்மைகளில் இருந்து காக்கும் கடவுளாக நாம் நம்புவது மாரியம்மனை. இவரை வணங்கி கூழ் உற்றுவதின் மூலம் அம்மை உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொண்டுள்ளனர். 

  மேலும், கூழ் பானையை சுற்றி மஞ்சளும் வேப்பிலையும் வைப்பார்கள்.. இவையும் கிருமி நாசியே.. நோய் பரவாமல் தடுக்கும். 

 நம் முன்னோர்களின் பழக்கங்கள் ஏதும் கண்மூடித்தனமானது அல்ல. காரணங்களை அலசினால் விளக்கங்கள் ஆச்சரியமூட்டும்..

Sunday, May 29, 2011

செல்லமா பாரதி

சின்ன பிள்ளையா இருக்கும் போதே பாரதியை படிக்கவும் ரசிக்கவும் ஆரம்பிச்சிட்டேன்..  ஆனால் பாரதி படம் பார்த்ததுக்கு அப்புறமோ என்னவோ செல்லமாவை அதிகம் ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்..
பாரதி மாதிரி ஒருத்தர் கூட இவ்ளோ நாள் வாழ முடிஞ்சி இருக்கே.. அதுவே பெரிய விஷயம்...
ஆச்சரியம் இல்லாமல் பாரதி ஒரு உயர்ந்த மனிதர்.. ஆனால் ஒரு வீம்புக்கார கவிஞருடன் வாழும் போதும் சரி, வீட்டில் பணம் இல்லாமல் போகும் போதும் சரி, பாரதி தவறான பாதையில் செல்லும் போதும் சரி, பாரதி மீது அவர் கொண்ட காதலும் சரி..
இப்போ ஏன் திடீர்னு செல்லமா பத்தி எழுதிரேனா, அதுக்கு காரணம் வாலிபக் கவிஞர் வாலியும் என்றும் இளமை அனந்த விகடனும்.. போன வாரம் வந்த விகடன்ல நினைவு நாடாக்கள்ல செல்லமா பத்தி அவர் எழுதினது...
பாரதியின் சீடன் என்பதால் பாரதிதாசன் செல்லமாவை புகழலாம்... ஆனால் மேத்தாவின் கருத்து தான் என்னுடையதும் ..
"ஒரு ஞானக் கிறுக்கனோடு குடித்தனம் நடத்திய குணவதி அல்லவா அந்த அம்மாள்.. அது அவ்வளவு இலேசுப்பட்ட காரியமா என்ன?"
உண்மையான வார்த்தைகள்...  :) 

இப்போலாம் சும்மாவே சமோசா வாங்குற மாதிரி இரண்டு மாசத்தில விவாகரத்து வாங்கும் மக்களுக்கு நடுவில் செல்லமா ஓர் நிறைவான உதாரணம்...
எந்த ஒரு சாதனை மனிதனுக்கு பின் இந்த மாதிரி ஒரு பெண் இருப்பதால் தான் குடும்பம் நடக்குது, சாதனையும் நடக்குது..

Sunday, April 3, 2011

பாரதியின் கவிதை-மூன்றாவது பரிசு

 சமீபத்தில இந்த பாட்டை எந்த சூழ்நிலையில பாரதி எழுதினாரு படித்தபோது ஆச்சரியமாக  இருந்தது.. நாம் சற்றும் யூகிக்க முடியாத கவிதை பின்னணி.

"ஒரு பாட்டுக்கு ஒரு கதை" என்னும் தலைப்பில் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகதில் இருந்து,...
சென்னையில் இருந்த ஒரு சமூகத்தினர், நம் நாட்டை குறித்து சிறந்த கவிதை எழுதுபவருக்கு பரிசு தரப் போவதாக அறிவித்தனர். பரிசு தொகை
முதல் பரிசு-முந்நூறு ரூபாய்
இரண்டவது-இரண்டு நூறு
மூன்றாவது-நூறு
இவ்வாறு அறிவித்து இருந்தனர்.

யார் வேண்டுமானாலும் கவிதை அனுப்பலாம்.பாரதியின் நண்பர்கள் அவரை ஒரு கவிதை அனுப்புமாறு கேட்டனர்.. அவரும் அனுப்பினர்..
சிறிது காலம் கழித்து அவருடைய கவிதைக்கு மூன்றாவது பரிசு என்று அறிவிக்கப்பட்டது. இது பாரதி மற்றும் அவரது நண்பர்களுக்கு வருத்தத்தை அளித்தது.. முதல் இரண்டு பரிசு யாருக்கோ தர வேண்டும் என்று போட்டியை நடத்தியவர்கள் முடிவு செய்து விட்டனர் என்று பாரதி வருத்ததுடன் கூறினர்.

முதல் இரண்டு கவிதை என்னவாயிற்று யாருக்கும் தெரியாது.. ஆனால் மூன்றாவது பரிசு பெற்ற கவிதை மிக புகழ் பெற்ற கவிதையாக இன்றும் விளங்கி வருகிறது.


 "செந்தமிழ் நாடெனும் போதினிலே"- இந்த பாடல் இல்லாத தமிழ் போட்டிகள் இருந்ததாக ஞாபகம் இல்ல.  பாரதி எழுதிய கவிதையும் இதுவே..

தாலியும் மஞ்சளும்-எவ்வளவு பழமை

பண்டை தமிழனை பற்றி நமக்கு எவ்ளோ தெரியும்??? நாம் எவ்வளவு அவர்களிடம் இருந்து வேறுபடுகிறோம்???? எதில் வேறுபாடு??

நான் படித்து கொண்டிற்கும் "பண்பாட்டு அசைவுகள்" என்னும் புத்தகத்தில் தொ.பரமசிவன் அவர்கள் எழுதியதில் சில ஆச்சர்யங்கள் இருந்தது...அதில் சில பகுதிகள் இந்த பதிவில் இருந்து....

முதலில் மங்களகரமான தலைப்பில் இருந்து ஆரம்பிக்கிறேன்... "தாலியும் மஞ்சளும்"
 
நமக்கு கிடைக்கும் தொல்காப்பியச் சான்றுகளிலிருந்து(சங்க இலக்கியம்,சிலப்பாதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. 
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1957யில் ஒரு பெரிய விவாதமே நடந்ததாகவும் அதை தொடங்கி வைத்தவர் கண்ணதாசன் என்றும் குறிப்பிடுகிறார். அதில் ம.போ.சி மட்டுமே தாலி தமிழரின் தொல் அடையாளம் என்று வாதிட்டு இருக்கிறார்.

கி.பி.10ஆம் நுற்றாண்டு வரை தமிழ்நாட்டில் தாலி பேச்சே கிடையாதாம்!!!! 

தொல்பழங்குடி மக்கள் பிள்ளைகளைத்  தீயவை அணுகாமல் காப்பதற்கு இடுப்பில் அரைஞான் கயிற்றில் சில பொருள்களைக் கோர்த்து கட்டும் வழக்கம் இருந்தது.  ஐந்து பொருட்களை சேர்த்து கட்டுவதனால் சங்க இலக்கியங்கள், 'ஐம்படைத் தாலி' என்று குறிப்பிடுகிறது.  மிக அண்மைக்காலம் வரைக் கூட கிராமப்புறங்களில்  அரைஞான் கயிற்றில் நாய்,சாவி,தாயத்து,காசு,அரசிலை உருவங்களை செய்து கட்டுவது வழக்கமாக இருந்துள்ளது.
எனவே தாலி என்னும் சொல் கழுத்துத் தாலியை தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவு. கி.பி.7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்!!!

மாறாக, வீரத்தின் சின்னமாக தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து ஆண் தன் கழுத்தில் கோர்த்து கொண்டதை 'புலிப்பல் தாலி' என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிச்சனல்லூர் உட்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருளிலும் தாலி இல்லை.
இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி,பெருதாளி,பஞ்சாரத்தாலி, மண்டைதாலி, நாணல் தாலி,பார்ப்பாரத் தாலி,பொட்டுத் தாலி முக்கியமானவை..
கி.பி.10ஆம் நூற்றாண்டிற்கு பின்னரே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத் தாலி புனிதப் பொருளாக கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம். அதன் பின்னரே கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்கு தாலி அணிவிக்கப்பட்டது. 
மதுரை பக்கத்தில் மணமகன் இல்லாமல் அவனின் சகோதரியை வைத்துக் கூட திருமணம் நடந்து இருக்கிறது ...

தாலி மட்டும் இல்ல... இன்று திருமணத்தில் முக்கியமான மஞ்சள் குங்குமம் கூட பெண்ணுக்குரிய மங்கள பொருட்களாக பெசப்படலை.. 
ஆரோக்கிய பொருளாகவே இவை கருதப் பட்டுள்ளது..
கிருமி எதிர்ப்பு சக்தி இதில் உள்ளதால் குழந்தைக்குத் தேய்த்து குளிப்பாட்டும் பொருட்டு பயன்படுத்தி உள்ளனர். 
விரலி என்றால் முகபாவனை மாற்றி நடிக்கிற பெண்ணைக் குறிக்கும். அன்று குத்தாடிய பெண்கள் விளக்கு ஒளியில் முகம் துணிபாக தெரிய பயன்படுத்தி உள்ளனர். 


விறலியை மதியாத நம் சமுகம் விரலி மஞ்சளை மட்டும் இன்றும் கொண்டாடுகிறது..

இந்த பதிவை பற்றிய கருத்துகள் வரவேற்கப் படுகிறது...